இன்றும்
துவங்கியது எனக்கான விடியல்..
இன்றிரவும் நிகழ்த்துவாய்
முற்றுப் பெறுவதற்கான
ஒரு உரையாடலை..
இன்றும்
அணிந்து கொள்கிறேன்
எதிர்கொள்வதற்கான கவசத்தையும்
நாளையை நீட்டிப்பதற்கான
சில கவிதைகளையும்..
*
உரையாடல்கள்
பரிமாற்றங்கள்
விசாரிப்புகள் அனைத்தும் குறுகிப் போயிற்று..
பெருகி சூழ்கிறது
அத்தனை அடக்குதளையும்
மீறிய நேச நினைவுகள்..
*
என் இருத்தலின் சாத்தியம்
குறித்து என்னைவிட
அதிகம் கவலைப்படுகிறாய்
அல்லது
அவ்வாறாகக் காட்டிக்கொள்கிறாய்
என் மரணத்திற்குப் பின்னும்..
எந்த அச்சுறுத்தலும் இல்லாமல்
நிகழ்த்துவேன்..
நமக்கிடையே நிகழ்ந்த
நேசத்தின் கனபரிமாணங்களை
மீண்டும் மீண்டும்..
No comments:
Post a Comment