Friday, January 21, 2011

சில நொடிகள் - 14


1
உன் காதலிலிருந்து 
மரணத்தைக் கண்டேன்.. 

என் மரணத்திலிருந்து 
காதலைக் காண்பாய்.. 
===================
2
இந்த நகரத்திற்கு 
யாரை நம்பியும் 
வரவில்லைதான் 
உன் வார்த்தைகளில் 
சொல்வதானால் 
என்னை மட்டுமே 
நம்பி நானிருக்கிறேன். 

ஆம் 
உன்னைச் சந்திப்பதற்கு 
முன்பு வரை 
எனக்காகவே நானிருந்தேன். 
என்னிலே நானிருந்தேன்.. 
========================
3
ஊசியால் குத்தி 
அழுத்திப் பார்க்கிறாய் 
இரத்தம் பெருகுகிறது 
சிந்திய சிவப்புத் துளிகளில் 
காயத்துவங்கியது 
உன் வார்த்தைகளின் தடயமும்..
==============================
4
அமைதியுறுகிறது 
என் மனம் 
இந்த நள்ளிரவில்.. 
விடியலுக்கு இன்னும் சிலமணிநேரமே 
என்றல்ல.. 

நீயும் இந்நேரம் 
என்னைப்பற்றிய 
சிந்தனையுடன் 
விழித்திருக்கிறாயென..
=======================
5
மறந்துவிடுவேன் என 
பேச மறுக்கிறாய் 
மூடன் நீ 
மறப்பது உன் சாயல்..
நினைப்பது என் சுயம்..
======================
6
இன்னும் சில நாட்களில் 
அறியத் தருவேன் உனக்கு 
உயிர்த்திருத்தலின் வலி பற்றி.. 
=============================
7
அன்பை வார்த்தைகளில் 
சொல்வதை விட 
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..

அன்பை எழுத்துக்களில் 
பதிய வைப்பதை போல 
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..

அன்பை புரிந்து கொள்ள 
மறுப்பது போல 
மிக மோசமான வலி எதுவுமில்லை..

அன்பை தயவு தாட்சண்யமின்றி 
மறுதலிப்பது போல 
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை.. 

அன்பை அது எவ்வளவு ஆழமாயினும் 
புறக்கணிப்பது போல 
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை.. 
====================
8
இனி யாரையும் 
எப்போதும் 
என்னால் காதலிக்க இயலாது 

யாரும் ஒரு துளி காதலை கூட 
என்னில் ஊற்றவும் முடியாது 

என் கோப்பை 
நிரம்பியிருக்கிறது 
உன் மீதான காதலால்.. 
=================
9
என் விளிம்பிலும் 
என் அடியிலும் 
துள்ளி எழும்பி சிதறி 
உறைந்து போகிறது
உன் வார்த்தை துகள்கள்.. 
=================
10
ஒவ்வொரு இரவிலும் புகுந்து 
மாற்றியது உன் குரல் 
மாறியது என் மனம் 
அதிலிருந்து 
வழிந்துருகும் காதல் 
மாறக்கூடியதோ 
மாற்றக் கூடியதோ அல்ல.. 
ஒரே இரவிலும் 
இனிவரும் இரவிலும்.. 
=================
11
என் விதியை நிர்ணயிக்கிற 
ஆயுதத்தை
காலம் 
உன்னிடம் தந்திருக்கிறது 

நீ எதுவும் செய்யலாம்
ஆயுதத்தால் 
தாக்கவோ 
காக்கவோ.. 
===========
12
முதல் நபரான நீயும் 
மூன்றாம் நபரான வேறாரும்
சொல்வது எதுவாயினும் 
என் இருத்தலுக்கு 
சாதகமாக இல்லாத பட்சத்தில் 
தகர்த்தெறிந்து 
காத்திருப்பேன் 
இரண்டாம் நபரான 
என் அதிவிருப்பம் 
நிறைவேறுவதற்கான 
காலத்தை நோக்கி 
இப்பெருங்களத்தில்..
===================
13
எனக்காக காத்திருத்தாய் 
சில நொடிகள் 
உனக்காக காத்திருக்கிறேன் 
நொடிநொடியாய்..

எனக்காக விழித்திருந்தாய் 
சில இரவுகள் 
உனக்காக விழித்திருக்கிறேன் 
ஒவ்வொரு இரவும் 

எனக்காக வாழத் துணியவில்லை 
இன்னும் நீ 
உனக்காக வாழ்ந்திருக்கிறேன் 
மரணத்தின் நெடியிலும் 
======================
14
கட்டுப்பாடுகளுக்குள் 
சிக்கித் திணறுகிறாய் 
அதன் இடிபாடுகளில் 
நொறுங்குகிறது 
என் சுவாசமும்.. 

தகர்த்தெறிகிற வழிபற்றி 
முனகலோடு சொல்கிறேன் பலமுறை 
உன் குரலுயர்த்தி 
என்னை நகரச் சொல்கிறாய்..

இயக்கமற்று மயக்கமுறுகிறது 
என் தேகமும் மோகமும்.. 
========================

No comments:

Post a Comment