Tuesday, January 25, 2011

நாம் சந்தித்துக் கொண்டோம்


நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு உணவகத்தில்
உன் கண்ணிலிருந்த அன்பைப் பருகினேன்
என்னிலிருந்த தாகத்தை விழுங்கினாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பூங்காவில்
என் கையைப் பற்றிக் கொண்டாய்
உன் கைமுடிகளை எண்ணினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு கடற்கரையில்
உன் தோள் தொட்டு விளையாடினேன்
என் நெருக்கத்திற்குள் உறைந்தாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பெரிய கடையில்
எனக்குத் தேவையானதை வாங்கித் தந்தாய்
என் புன்னகையிலும் ஸ்பரிசத்திலும் வசீகரித்தேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பேருந்து நிலையத்தில்
எனக்கு கண்ணீரை பரிசளித்தாய்
உப்பாய் கரைந்து கொண்டிருந்தேன்
பின்னர்
சர்க்கரைப் படிவங்களாகினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
தினம் இரவுகளில்
மொய்த்துக் கிடக்கிறாய்
ஒரு இரவு கட்டெறும்பாய்
மறு இரவு சிற்றெறும்பாய்
கரையத் துவங்கியது காதல்
நானிப்போது உன் இரவுகளில்
மழை எறும்பாய்..

No comments:

Post a Comment