என் ஆழ்துயர்
குறித்துச் சிந்திக்குமுனக்கு
குறித்துச் சிந்திக்குமுனக்கு
எந்த வருத்தமும் இல்லை..
நீயே துயரத்திற்கான
மூலமானதைப் பற்றி..
*
சாத்தியமற்றவையென
ஏதுமில்லை
சாத்தியங்களை
சந்திக்க துணிவிருந்தால்
சாத்தியமற்றவையும்
சாத்தியமே..
*
நான் விரும்பாத வார்த்தைகளை
நீ சொல்லும் போது
உள்ளுக்குள் உடைபடுகின்றன
என் கனவுப் பாதைகளும்
என் எதிர்பார்ப்புகளும்..
இருந்தும் மீண்டெழுந்து
வருகிறேன்
நீ விதைத்த நம்பிக்கையினூடே.
*
நமக்கிடையேயான
நிறபேதம்
இனபேதம்
மத பேதம்
யாவையும் கடந்து
நேசத்தின் பாதையில்
ஒன்றிணைந்தோம்..
சேரும் வேளையில்
பார்க்கிறாய்..
காதலில் பேதத்தை..
*
என்னைத் தவிர
யாரும் உணரக் கூடியதில்லை
உன்னுடைய மறைப்பும்
உன்னுடைய மறுப்பும்
*
உனக்கு உறுத்தல்
எதுவும் இருக்கப் போவதில்லை
நீ எந்த உறுதியும் தந்ததில்லை
என்பதால்..
எனக்கும் கூட
எந்த உறுத்தலுமில்லை
நான் எனக்கான உறுதியுடன் இருப்பதால்..
*
எந்த சலனமுமின்றி
நிகழ்த்த முடிகிறது
என் மீது ஒரு வன்முறையை
நடந்ததைப் பற்றி..
எந்த சலனமுமில்லாமல்
கேட்டு வருகிறேன்..
உன் மீதொரு நிகழ்த்துதலுக்கான
நாளொன்றை எதிர்நோக்கி..
No comments:
Post a Comment