Friday, January 21, 2011

எதிர்நோக்கி - 7

என் ஆழ்துயர் 
குறித்துச் சிந்திக்குமுனக்கு 
எந்த வருத்தமும் இல்லை..
நீயே துயரத்திற்கான 
மூலமானதைப் பற்றி.. 

*

சாத்தியமற்றவையென
ஏதுமில்லை 
சாத்தியங்களை 
சந்திக்க துணிவிருந்தால் 
சாத்தியமற்றவையும் 
சாத்தியமே.. 


*

நான் விரும்பாத வார்த்தைகளை 
நீ சொல்லும் போது 
உள்ளுக்குள் உடைபடுகின்றன 
என் கனவுப் பாதைகளும் 
என் எதிர்பார்ப்புகளும்.. 
இருந்தும் மீண்டெழுந்து 
வருகிறேன் 
நீ விதைத்த நம்பிக்கையினூடே.

*

நமக்கிடையேயான 
நிறபேதம் 
இனபேதம் 
மத பேதம் 
யாவையும் கடந்து 
நேசத்தின் பாதையில் 
ஒன்றிணைந்தோம்.. 
சேரும் வேளையில் 
பார்க்கிறாய்..
காதலில் பேதத்தை..

*

என்னைத் தவிர 
யாரும் உணரக் கூடியதில்லை 
உன்னுடைய மறைப்பும் 
உன்னுடைய மறுப்பும்

*

உனக்கு உறுத்தல் 
எதுவும் இருக்கப் போவதில்லை
நீ எந்த உறுதியும் தந்ததில்லை 
என்பதால்..
எனக்கும் கூட 
எந்த உறுத்தலுமில்லை
நான் எனக்கான உறுதியுடன் இருப்பதால்.. 

*

எந்த சலனமுமின்றி 
நிகழ்த்த முடிகிறது 
என் மீது ஒரு வன்முறையை 
நடந்ததைப்  பற்றி.. 

எந்த சலனமுமில்லாமல் 
கேட்டு வருகிறேன்.. 
உன் மீதொரு நிகழ்த்துதலுக்கான
நாளொன்றை எதிர்நோக்கி..    

No comments:

Post a Comment